இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் மாபெரும் சாதனையை சமன் செய்த தென் ஆப்பிரிக்கா

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
ராய்ப்பூர்,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் ஒருநாள் தொடரின் 2-வது போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 358 ரன்கள் குவித்தது. கெய்க்வாட் (105 ரன்கள்), விராட் கோலி (102 ரன்) சதம் விளாசினர். முதலாவது போட்டியிலும் விராட் கோலி சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 359 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 110 ரன்கள் விளாசினார்.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்களை ‘சேசிங்’ செய்த அணி என்ற ஆஸ்திரேலியாவின் மாபெரும் சாதனையை தென் ஆப்பிரிக்கா சமன் செய்துள்ளது. 2019-ம் ஆண்டு மொகாலியில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக 359 ரன் இலக்கை ஆஸ்திரேலியா வெற்றிகரமாக விரட்டிப்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






