டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறை.. தென் ஆப்பிரிக்க அணி அரிய சாதனை

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி இந்த சாதனையை படைத்துள்ளது.
கவுகாத்தி,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் அடித்துள்ளது. செனுரன் முத்துசாமி 25 ரன்களுடனும், கைல் வெர்ரைன் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா, சிராஜ் மற்றும் பும்ரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் டாப் 4 பேட்ஸ்மேன்களான மார்க்ரம் 38 ரன்களும், ரிக்கல்டன் 35 ரன்களும், ஸ்டப்ஸ் 49 ரன்களும், பவுமா 41 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அணியின் டாப் 4 வீரர்கள் யாரும் அரைசதம் அடிக்காமல் ஒவ்வொருவரும் 35 அல்லது அதற்கு மேல் ரன் அடிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த அரிய சாதனையை முதல் முறையாக தென் ஆப்பிரிக்க அணி படைத்துள்ளது.






