இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு சச்சின் அட்வைஸ்


இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு சச்சின் அட்வைஸ்
x

இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.

மும்பை,

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நாளை தொடங்குகிறது. 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடரில் இந்திய அணியின் முதலாவது ஆட்டம் இதுவாகும்.

கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் கடந்த மாதம் டெஸ்டில் இருந்து விடைபெற்றதால் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த தொடரில் களம் இறங்குகிறது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் வெற்றி பெற இந்திய அணிக்கு முன்னாள் ஜாம்பவான் வீரரான சச்சின் தெண்டுல்கர் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "இங்கிலாந்தில் நீங்கள் விளையாடும்போது எப்போதும் மூன்று விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். முதலாவது அணியின் நிலைமை, 2-வது காற்றின் தரம் மற்றும் 3-வது பிட்ச்சின் நிலை. இந்த காரணிகள் ஒவ்வொன்றும் நீங்கள் விளையாடும் விதத்தை பாதிக்கின்றன. அதன் காரணமாக சில நேரங்களில் நீங்கள் பேட்டிங் செய்வதை கடினமாக உணர்வீர்கள். அது போன்ற சூழ்நிலைகளை நீங்கள் கவனமாக இருந்து கண்டறிய வேண்டும்.

அதற்காக அனைத்து பந்துகளையும் விடக்கூடாது. அதே சமயம் சரியான பந்துகளைத் தவற விட்டு மற்ற பந்துகளை சரியான நேரத்தில் அடிப்பதற்கான நோக்கத்தை காண்பிக்க வேண்டும். சூரியன் வெளியே வரும்போது பிட்ச் பேட்டிங் செய்வதற்கு அழகாக இருக்கும். அதைப் பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் நிறைய ரன்கள் அடிக்க முடியும். அப்போதுதான் உங்களுடைய ஷாட்டுகளை பயன்படுத்தி அதிரடியாக விளையாட வேண்டும்" என்று கூறினார்.

1 More update

Next Story