பெங்களூருவில் புதிய கிரிக்கெட் மைதானம் - கர்நாடக அரசு ஒப்புதல்

image courtesy:PTI
பெங்களுரூவின் 2வது கிரிக்கெட் மைதானம் பொம்மசந்திராவில் அமைக்கப்படவுள்ளது.
பெங்களூரு,
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் ஆனதால், பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஜூன் 4-ந்தேதி வெற்றிக் கொண்டாட்டம் நடந்தது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் முன்பு திரண்டனர்.
இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அத்துடன் சம்பவம் நடைபெற்ற பெங்களூரு சின்னசாமி மைதானம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. எனவே இனிவரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு சின்னசாமி மைதானம் நகரின் மையப்பகுதியில் அகற்ற பரிசீலிக்கப்பட்டு வருவதாக கர்நாடக முதல் - மந்திரி சித்தராமையா ஏற்கனவே கூறினார்.
இந்நிலையில் பெங்களூருவில் புதிய கிரிக்கெட் மைதானத்தை கட்ட கர்நாடக அரசு ஒப்புதல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களுரூவின் 2வது கிரிக்கெட் மைதானம் பொம்மசந்திராவில் அமைக்கப்படவுள்ளது. சூர்யா சிட்டியில் ரூ.1,650 கோடி செலவில் உருவாக்கப்பட உள்ள பிரமாண்ட விளையாட்டு வளாகத்தின் ஒரு பகுதியாக 80,000 இருக்கைகளுடன் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.