பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் அணி மீது அளித்த புகாரை வாபஸ் பெற்ற மதுரை பாந்தர்ஸ்

மதுரை பாந்தர்ஸ் அணி நிர்வாகம் சார்பில், டி.என்.பி.எல். தலைமை செயல் அதிகாரி பிரசன்னா கண்ணனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
சென்னை,
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் கடந்த 14-ந் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் ஆர்.அஸ்வின் தலைமையிலான நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது.
இந்த ஆட்டத்தின் போது திண்டுக்கல் அணியினர் ரசாயனங்கள் தடவப்பட்டது போல் தோன்றிய துண்டுகளை (டவல்ஸ்) பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தினர் என்றும் அந்த அணியினர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை பாந்தர்ஸ் அணி நிர்வாகம் சார்பில், டி.என்.பி.எல். தலைமை செயல் அதிகாரி பிரசன்னா கண்ணனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து முறைப்படி விசாரணை நடத்தி மேல் நடவடிக்கை எடுக்க முறையான ஆதாரம் ஏதாவது இருந்தால் சமர்பிக்கலாம் என்று காலக்கெடு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் மதுரை அணியின் பயிற்சியாளர் குழு மற்றும் நிர்வாகம் விளையாட்டின் நலன் கருதியும், போட்டியை சுமூகமாக நடத்துவதை கருத்தில் கொண்டும் தாங்கள் அளித்த புகாரை வாபஸ் பெற்றுள்ளனர்.