ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சூர்யா ஆனந்த் அபாரம்... நெல்லை அணியை வீழ்த்திய மதுரை பாந்தர்ஸ்


ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சூர்யா ஆனந்த் அபாரம்... நெல்லை அணியை வீழ்த்திய மதுரை பாந்தர்ஸ்
x

நெல்லை அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.

சேலம்,

8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன.

இதனையடுத்து இந்த தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. இதனிடையே மழை காரணமாக இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து 7.40 மணிக்கு டாஸ் போடப்பட்டது.

இதில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து மதுரை பாந்தர்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராம் அரவிந்த் மற்றும் பாலசந்தர் அனிருத் களமிறங்கினர்.

இதில் ராம் அரவிந்த் 9 ரன்களில் அவுட் ஆன நிலையில், அடுத்து வந்த கேப்டன் சதுர்வேத் 1 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பாலசந்தர் அனிருத் நிதானமாக ஆடி 48 ரன்கள் எடுத்தார். அதீக் அர் ரகுமான் 36 ரன்களும், சங்கர் கணேஷ் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியாக மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. நெல்லை அணியில் அதிகபட்சமாக சோனு யாதவ் 3 விக்கெட்டுகளும், ராக்கி பாஸ்கர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் சார்பில் அஜிதேஷ் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் களமிறங்கினர்.

இந்த ஜோடியில் தான் சந்தித்த முதல் பந்திலே அஜிதேஷ் (0) கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து சந்தோஷ் குமார் 3 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹரிஷ் 2 ரன்னில் கேட்ச் ஆனார்.

மறுமுனையில் அதிரடியாக ரன்கள் சேர்த்துக்கொண்டிருந்த கேப்டன் அருண் கார்த்திக் 23 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

இதனிடையே கேப்டன் அருண் கார்த்திக்குடன், ஈஸ்வரன் ஜோடி சேர்ந்தார். சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்து வந்த ரித்திக் ஈஸ்வரன் 25 (19) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய நிர்மல் குமார் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அருண் கார்த்திக் 67 (43) ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய சோனு யாதவ் அதிரடியாக ரன்கள் சேர்த்து வந்தநிலையில் 32 (20) ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்துகளமிறங்கிய யுதீஷ்வரன், சச்சின் ராதி, இமானுவேல் செரியன்ஆகியோர் (0) வந்த வேகத்தில் வெளியேறினர்.

முடிவில் முகமது அட்னன் கான் 16 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மதுரை பாந்தர்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக சூர்யா ஆனந்த் 4 விக்கெட்டுகளும், சரவணன், குர்ஜப்நீத் சிங் மற்றும் ராஜலிங்கம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதன்மூலம் நெல்லை அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.

1 More update

Next Story