அணியில் 1-2 பிரச்சினைகள் இருந்தால் பரவாயில்லை.. ஆனால்.. - தோனி வேதனை


அணியில் 1-2 பிரச்சினைகள் இருந்தால் பரவாயில்லை.. ஆனால்.. - தோனி வேதனை
x

ஐதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியடைந்தது.

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக டிவால்ட் பிரெவிஸ் 42 ரன்கள் அடித்தார். ஐதராபாத் அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதைத்தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 44 ரன்கள் அடித்தார். சென்னை அணி தரப்பில் நூர் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில் இந்த தோல்விக்குப்பின் சென்னை கேப்டன் மகேந்திரசிங் தோனி அளித்த பேட்டியில், " ஐ.பி.எல். போன்ற ஒரு தொடரில், உங்களது அணியில் 1 அல்லது 2 இடங்களில் பிரச்சினைகள் இருந்தால் பரவாயில்லை. ஆனால் உங்களது பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லையெனில் வெற்றி கடினமாகி விடும். ஏனெனில் அதன் காரணமாக நீங்கள் மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். உங்களது வீரர்கள் நன்றாக செயல்பட்டால் அவர்களுக்கு நீங்களும் கூடுதல் வாய்ப்பு வழங்குவீர்கள். அது வேலையாகவில்லை எனில் நீங்கள் அடுத்ததை நோக்கி நகர வேண்டும்.

ஆனால் வாய்ப்பைப் பெறும் 4 வீரர்களும் ஒரே சமயத்தில் நன்றாக செயல்படவில்லையெனில் நீங்கள் மாற்றத்தை செய்ய வேண்டும். ஏனெனில் உங்களால் தோல்வியுடன் தொடர்ந்து நகர முடியாது. நாங்கள் போதுமான ரன்கள் அடிக்கவில்லை. அதுவே தற்போது வெற்றிக்கு தேவையானதாக இருக்கிறது. இந்த ஆட்டம் மாறியுள்ளது. அதனால் எப்போதும் 180 - 200 ரன்களை அடிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் சூழ்நிலைகளை உணர்ந்து அதற்கு தகுந்த ரன்களை அடிக்க வேண்டும்" என்று வேதனையுடன் கூறினார்.

1 More update

Next Story