ஐ.பி.எல்.: பிளே ஆப் வாய்ப்பிலிருந்து வெளியேறிய சிஎஸ்கே..? உடைந்த ரசிகர்களின் கனவு


ஐ.பி.எல்.: பிளே ஆப் வாய்ப்பிலிருந்து வெளியேறிய சிஎஸ்கே..? உடைந்த ரசிகர்களின் கனவு
x
தினத்தந்தி 26 April 2025 8:22 AM IST (Updated: 26 April 2025 8:33 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அணிக்கு இன்னும் 5 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக டிவால்ட் பிரெவிஸ் 42 ரன்கள் அடித்தார். ஐதராபாத் அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதைத்தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 44 ரன்கள் அடித்தார். சென்னை அணி தரப்பில் நூர் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நடப்பு தொடரில் 9-வது லீக் போட்டியில் விளையாடிய சென்னை அணி சந்தித்த 7-வது தோல்வி இதுவாகும். வெறும் 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது.

ஏனெனில் எதிர்வரும் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் சென்னை அணியால் 14 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். அதுவும் நல்ல ரன்ரேட் விகிதத்தில் வெற்றி பெற வேண்டும். அத்துடன் மற்ற அணிகளின் முடிவும் சென்னை அணிக்கு சாதகமாக அமைய வேண்டும். அவ்வாறு நடந்தால் மட்டுமே சென்னை அணியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் இந்த சீசனில் சென்னை அணி ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது.

இதனால் 6-வது கோப்பையை சென்னை அணி வெல்லும் என்று எதிர்பார்த்த சிஎஸ்கே ரசிகர்களின் கனவு உடைந்துவிட்டது.

1 More update

Next Story