இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை: தொடரை வெல்லப்போவது யார்?


இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று  பலப்பரீட்சை: தொடரை வெல்லப்போவது யார்?
x

கோப்பையை வெல்வதற்கான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.

நடப்பு தொடரில் இந்தியாவின் பேட்டிங் சூப்பராக இருக்கிறது. விராட் கோலி, ரோகித்சர்மா, லோகேஷ் ராகுல் ரன் மழை பொழிந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். ஆனால் 2-வது ஆட்டத்தில் 358 ரன்கள் குவித்த போதிலும் பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் சொதப்பியதால் வெற்றி வாய்ப்பை இந்தியா கோட்டை விட்டது. இரவில் பனியின் தாக்கம் இருப்பதால் பவுலர்கள் பந்தை கச்சிதமாக பிடித்து வீச முடியாமல் சிரமப்படுகிறார்கள். இதனால் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் எடுக்க முடிகிறது. அதாவது சூழல் 2-வது பேட்டிங்குக்கே சாதகமாக காணப்படுவதால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் ‘டாஸ்’ இந்தியாவை துரத்தும் துரதிர்ஷ்டமாக இருக்கிறது. கடைசி 20 ஒரு நாள் ஆட்டங்களில் தொடர்ச்சியாக டாசில் தோற்றுள்ள இந்தியாவுக்கு இன்றைய போட்டியிலாவது அதிர்ஷ்டம் அடிக்குமா என்பதை பார்க்கலாம்.

மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் இந்த ஆண்டில் விளையாடப்போகும் கடைசி சர்வதேச போட்டி இதுவாகும். அதனால் அவர்கள் வெற்றியோடு நிறைவு செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதல் இரு ஆட்டங்களில் முறையே 135 மற்றும் 102 ரன்கள் வீதம் எடுத்த விராட் கோலி ‘ஹாட்ரிக்’ சதம் விளாசுவாரா? என ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். விசாகப்பட்டினம், கோலிக்கு ராசியான மைதானம். இங்கு ஏற்கனவே ஒரு நாள் போட்டியில் 3 சதங்கள் அடித்துள்ள கோலி மறுபடியும் சதம் கண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதே சமயம் தடுமாறும் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் பார்முக்கு திரும்பினால் பேட்டிங் இன்னும் வலிமையடையும்.

நமது பந்து வீச்சு தான் மெச்சும்படி இல்லை. கடந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 8.2 ஓவர்களில் 85 ரன்களை வாரி வழங்கினார். ஆனால் மாற்று வேகப்பந்து வீச்சாளர் இல்லாததால் இந்த ஆட்டத்திலும் அவருக்கு இடம் கிடைக்கும். இந்திய அணி சொந்த மண்ணில் ஒரே பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை 1986-87-ம் ஆண்டுக்கு பிறகு இழந்ததில்லை. அந்த பெருமையை தக்க வைக்க இன்றைய மோதலில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

தென்ஆப்பிரிக்க அணியில் மார்க்ரம், மேத்யூ பிரீட்ஸ்கே, பிரேவிஸ், யான்சென் நல்ல பார்மில் உள்ளனர். முந்தைய ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணுவார்கள். தசைப்பிடிப்பால் அவதிப்படும் நன்ரே பர்கர், டோனி டி ஜோர்ஜிக்கு இடமிருக்காது என்று தெரிகிறது.

தென்ஆப்பிரிக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கே நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு இந்தியா வலுவாக மீண்டு வரும் என்பது தெரியும். அத்துடன் இது தொடரை தீர்மானிக்கும் ஆட்டம் என்பதால் உண்மையிலேயே சிறந்த போட்டியாக இருக்கப்போகிறது. எங்களது அணியில் சில பவுலர்கள் பேட்டிங்கும் செய்வதன் மூலம் அணியின் கலவை சரியாக அமைந்துள்ளது. அதிரடியாக ஆடக்கூடிய பிரேவிஸ், யான்சென், கார்பின் பாஷ் போன்ற வீரர்கள் எந்த தருணத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்கள். தற்போதைய பேட்டிங் வரிசை மீது நிறைய நம்பிக்கை உள்ளது. நாளைய தினம் (இன்று) நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்’ என்றார்.

போட்டி நடக்கும் விசாகப்பட்டினத்தில் இந்திய அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 7-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. மற்றொரு ஆட்டம் சமனில் முடிந்தது. தென்ஆப்பிரிக்கா இங்கு இதற்கு முன்பு ஒரு நாள் போட்டியில் ஆடியதில்லை.

பிற்பகல் 1.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், லோகேஷ் ராகுல் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், பிரசித் கிருஷ்ணா

தென்ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம், குயின்டான் டி காக், பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே, ரையான் ரிக்கெல்டன், டிவால்ட் பிரேவிஸ், மார்கோ யான்சென், கார்பின் பாஷ், கேஷவ் மகராஜ், லுங்கி இங்கிடி, பார்த்மேன்.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

1 More update

Next Story