டியூக்ஸ் பந்து சர்ச்சை: பும்ரா கூறியது என்ன..?

image courtesy:PTI
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் டியூக்ஸ் வகை பந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
லண்டன்,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவர்களில் 387 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 43 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. லோகேஷ் ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இதனிடையே இந்த தொடருக்கு பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்து அதன் வடிவமைப்பை சீக்கிரம் இழந்து விடுகிறது. நேற்றைய ஆட்டத்தில் 80-வது ஓவருக்கு பிறகு புதிய பந்து எடுக்கப்பட்ட போதிலும் அதன் தன்மையும் விரைவாக மாறியது. இதனால் பந்தை மாற்றக்கோரி இந்திய அணியினர் அடிக்கடி நடுவரிடம் முறையிட்டனர். இதையடுத்து 90.4-வது ஓவரிலும், 98.4-வது ஓவரிலும் பந்து இரண்டு முறை மாற்றப்பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. பல முன்னாள் வீரர்களும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த பும்ரா, "பந்து மாறுகிறது. உண்மையில் அதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில், மிகவும் கடினமாக உழைத்து விளையாடுவதால் என்னுடைய பணத்தை நான் இழக்க விரும்பவில்லை. எந்தவொரு சர்ச்சைக்குரிய கருத்தையும் கூறி எனது போட்டி கட்டணத்தை அபராதமாக கழிக்க விரும்பவில்லை.
ஆனால் எங்களுக்கு வழங்கப்பட்ட பந்தை வைத்து நாங்கள் வீசினோம். அது அப்படித்தான். எங்களால் அதை மாற்ற முடியாது. எங்களால் அதை எதிர்த்து போராட முடியாது. சில நேரங்களில் அது உங்கள் வழியில் செல்லும். சில நேரங்களில் உங்களுக்கு மோசமான பந்து கிடைக்கும். அது அப்படித்தான்" என்று கூறினார்.