பிளே ஆப் வாய்ப்பை ஏறக்குறைய இழந்த சிஎஸ்கே.. தலைமை பயிற்சியாளர் கூறியது என்ன..?

நடப்பு ஐ.பி.எல். சீசனில் இருந்து சென்னை அணி ஏறக்குறைய பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு சீசனில் 9-வது லீக் போட்டியில் விளையாடிய சென்னை அணி சந்தித்த 7-வது தோல்வி இதுவாகும். வெறும் 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது. இதனால் அந்த அணியை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தோல்விகள் குறித்து சென்னை அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங் சில கருத்துகளை கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இதுவரை நாங்கள் வெளிப்படுத்திய செயல்பாடுகளை வைத்து ஏலத்தில் சரியாக செயல்பட்டோம் என்று சொல்வது கடினமாகும். நாங்கள் எங்களுடைய விளையாடும் ஸ்டைல் பற்றி விரிவாகப் பார்த்து வருகிறோம். இந்த விளையாட்டு எப்படி உருமாறுகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். அது எளிதல்ல. கடினமான ஐ.பி.எல். தொடரில் எங்களுடைய ரெக்கார்டை நினைத்து பெருமைப்படுகிறோம்.
நீண்ட காலமாக தொடர்ச்சியாக அசத்தி வந்த எங்களுக்கு இங்கிருந்து வேறு வழியில் செல்ல அதிக நேரம் எடுக்காது. மற்ற அணிகள் ஏலத்தில் சிறந்து விளங்கியதால் தற்போது அசத்துகின்றன. ஆனால் எங்களால் அதை சரியாக செய்ய முடியவில்லை. ருதுராஜ் போன்ற முக்கிய வீரர் காயமடைந்தபோது டாப் ஆர்டரில் இருப்பவர்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும். ஏலம் என்பது கச்சிதமான அறிவியல் கிடையாது. அது நிலையற்ற மிருகம். எனவே நீங்கள் அதன் முடிவில் மன ரீதியாகவும் சில நேரங்களில் உடல் ரீதியாகவும் சோர்வடைந்து விடுவீர்கள்.
உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் இப்போதும் எங்களிடம் நல்ல அணி இருக்கிறது. அதனால் நாங்கள் வெற்றிப்பாதைக்கு திரும்பும் தூரம் தொலைவில் இல்லை. சில காயம், சுமாரான பார்ம், திட்டங்களைச் செயல்படுத்தாதது, நிறைய மாற்றங்கள் செய்தது போன்றவற்றால் சரிந்துள்ளோம். எனவே ஆம் எங்கள் அணியில் நிறைய பொறுப்பு மற்றும் ஆன்மா தேடலும் இருக்கிறது. அது 100 சதவீதம் என்னிடமிருந்து தொடங்குகிறது" என்று கூறினார்.