பும்ராவை பார்த்து பயமா..? இங்கிலாந்து கேப்டன் பேட்டி


பும்ராவை பார்த்து பயமா..? இங்கிலாந்து கேப்டன் பேட்டி
x

இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் நாளை தொடங்குகிறது.

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை லீட்சில் தொடங்க உள்ளது. இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அத்துடன் ரோகித், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அவர்கள் இல்லாமல் இந்திய அணி எப்படி விளையாட போகிறது? என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது. மேலும் அவர்களின் இடத்தை நிரப்பப்போவது யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணியை முன்னணி வீரரான ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்த உள்ளார். இருப்பினும் அவரால் 5 போட்டிகளிலும் விளையாட முடியுமா? என்பது சந்தேகம்தான். இருப்பினும் அவர் விளையாடும் போட்டிகளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் தற்சமயம் உலகின் நம்பர் 1 பவுலராக செயல்பட்டு வரும் பும்ரா கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் அசத்தலாக செயல்பட்டார். அதே பார்மை தொடரும் பட்சத்தில் அது இங்கிலாந்து அணிக்கு ஆபத்தாக முடியும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவை பார்த்து தங்களுக்கு பயமில்லை என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் இங்கிலாந்தில் வெற்றி பெறுவதற்கு இந்தியாவின் 11 வீரர்களும் அசத்த வேண்டுமென்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "எந்த பயமும் இல்லை. சர்வதேச கிரிக்கெட்டில், நீங்கள் எப்போதும் தரமான எதிரணியை எதிர்கொள்வீர்கள். பும்ராவின் திறமையும் அவரால் தம்முடைய அணிக்கு என்ன கொண்டு வர முடியும் என்பதும் எங்களுக்கு தெரியும். ஆனால் பயத்தின் அடிப்படையில் நிச்சயமாக இல்லை.

ஒரு பந்து வீச்சாளரால் மட்டுமே தனியாளாக தொடரை வென்று கொடுக்க முடியும் என்று நான் கருதவில்லை. வெற்றிக்கு அனைத்து வீரர்களும் அசத்த வேண்டும். 2 அணிகளிலுமே வெறும் ஒரு வீரர் மட்டுமே வெற்றிக்கு காரணமாக அமைவார் என்று நான் கருதவில்லை" எனக் கூறினார்.

1 More update

Next Story