இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்: இந்திய அணியிலிருந்து பும்ரா நீக்கம்

image courtesy:BCCI
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் பணிச்சுமை காரணமாக பும்ரா விளையாடவில்லை.
லண்டன்,
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் மழை பாதிப்புக்கு மத்தியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 69.4 ஓவர்களில் 224 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சன் 5 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு 3 விக்கெட்டும் சாய்த்தனர்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 51.2 ஓவர்களில் 247 ரன்னில் ஆல்-அவுட்டாகி, 23 ரன் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 64 ரன்களும், புரூக் 53 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அடுத்து 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் அடித்துள்ளது. ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், ஆகாஷ் தீப் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாதற்போது வரை 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இத்தகைய சூழலில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
முன்னதாக இந்த டெஸ்டில் பணிச்சுமை காரணமாக இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை. அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இந்த போட்டிக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய அணியிலிருந்து ஜஸ்பிரித் பும்ரா நீக்கப்பட்டுள்ளார். இதனை பி.சி.சி.ஐ. தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.