2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா ஏ

image courtesy:PTI
இந்திய அணியின் 2-வது இன்னிங்சிலும் துருவ் ஜூரெல் சதம் விளாசினார்.
பெங்களூரு,
இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 77.1 ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 132 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்க ஏ தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் டியான் வான் வுரென் 4 விக்கெட் வீழ்த்தினார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி 47.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில் 221 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. கேப்டன் அக்கர்மேன் 134 ரன்கள் விளாசினார். இந்திய தரப்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 34 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய ஏ அணி 7 விக்கெட்டுக்கு 382 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு 417 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்தியா ஏ தரப்பில் துருவ் ஜூரெல் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 17 ரன்னில் இருக்கையில் பந்து தாக்கியதால் கை மற்றும் வயிற்று பகுதியில் காயம் அடைந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வெளியேறினார். அடுத்த 2 விக்கெட் வீழ்ந்ததும் களம் திரும்பிய கேப்டன் ரிஷப் பண்ட் 65 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
இதைத்தொடர்ந்து 417 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன் எடுத்துள்ளது. இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.






