தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வரலாறு படைக்குமா இந்திய அணி..?

image courtesy:BCCI
ஆசிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இதுவரை எந்த அணியில் 400+ ரன்களை சேசிங் செய்ததில்லை.
கவுகாத்தி,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக செனுரன் முத்துசாமி சதம் (109 ரன்) அடித்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 83.5 ஓவர்களில் 201 ரன்னில் ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
அடுத்து இந்தியாவுக்கு பாலோ-ஆன் வழங்காமல் 288 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 78.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 549 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 94 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 549 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்க்தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் 13 ரன்களிலும், கே.எல். ராகுல் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 15.5 ஓவர்களில் 27 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. சுதர்சன் 2 ரன்களுடனும், குல்தீப் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி வெற்றி பெற இன்னும் 522 ரன்கள் அடிக்க வேண்டும். மறுபுறம் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 8 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இத்தகைய சூழலில் நாளை 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
முன்னதாக ஆசிய மைதானங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இதுவரை எந்த அணியும் 400+ ரன்களை சேசிங் செய்து வென்றதில்லை. கடந்த 2021-ம் ஆண்டு சட்டோகிராமில் நடைபெற்ற ஒரு டெஸ்டில் வங்காளதேசத்திற்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் 395 ரன்களை எட்டி பிடித்ததே ஆசிய மண்ணில் ஒரு அணி சேசிங் செய்த அதிகபட்ச இலக்காக இருந்து வருகிறது.
அந்த வரலாற்றை மாற்றி தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்துள்ள 549 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்து இந்தியா புதிய வரலாறு படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.






