"ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.." - டொனால்டு டிரம்ப்


ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.. - டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 19 Jun 2025 1:59 AM IST (Updated: 19 Jun 2025 6:11 AM IST)
t-max-icont-min-icon

தங்களிடம் சரண் அடையுமாறு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்த மிரட்டலை ஈரான் உச்சதலைவர் காமெனி நிராகரித்தார்.

டெஹ்ரான்,

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 13-ந்தேதி ஈரான் மீது இ்ஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. அணுசக்தி மையங்களையும், ராணுவ நிலைகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதிலடியாக தாக்குதலில் ஈடுபட்டது.

இஸ்ரேல் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து ஈரான் தினந்தோறும் அறிவிப்பது இல்லை. கடைசியாக, கடந்த 16-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில், 224 பேர் பலியானதாகவும், 1,277 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்பட்டு இருந்தது.

ஆனால், வாஷிங்டனில் உள்ள ஈரானிய மனித உரிமைக்குழு, ஈரானில் இதுவரை 585 பேர் பலியாகி இருப்பதாகவும், 1,300-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. அதுபோல், ஈரான் இதுவரை 400 ஏவுகணைகளையும், நூற்றுக்கணக்கான டிரோன்களையும் வீசி தாக்கி உள்ளது. அத்தாக்குதலில் இஸ்ரேலில் 24 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நேற்று 6-வது நாளாக இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் நீடித்தது. இஸ்ரேல் போர் விமானங்கள், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் 17-ந்தேதி இரவிலும், 18-ந்தேதி அதிகாலையிலும் குண்டு மழை பொழிந்தன.

யுரேனியம் செறிவூட்டும் மையமும், ஏவுகணை உதிரிபாகங்கள் தயாரிக்கும் இடமும் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. ஈரான் துணை ராணுவ புரட்சிப்படை தலைமையகம் அமைந்துள்ள ஹகிமியே பகுதியிலும் தாக்குதல் நடந்தது. மேற்கு ஈரானில் ஏவுகணை சேமித்து வைக்கும் இடங்களிலும், ஏவுகணை லாஞ்சர் மீதும் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

நேற்று அதிகாலை 5 மணிக்கு டெஹ்ரானில் அடுத்தடுத்து குண்டு சத்தங்கள் கேட்டன. இஸ்ரேலுக்கு பதிலடியாக, ஈரான் ஏவுகணைகளை அலைஅலையாக வீசி தாக்குதல் நடத்தியது. அவற்றில் 10 ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.

இதற்கிடையே, ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி நிபந்தனையின்றி சரண் அடைய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "காமெனி நிபந்தனையின்றி சரண் அடைய வேண்டும். அவர் எங்கு பதுங்கி இருக்கிறார் என்று அமெரிக்காவுக்கு தெரியும். ஆனால் இப்போதைக்கு அவரை கொல்லும் திட்டம் இல்லை" என்று அவர் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

ஆனால், சரண் அடைய வேண்டும் என்ற அவரது எச்சரிக்கையை காமெனி நிராகரித்தார். மேலும், ''ராணுவ ரீதியாக அமெரிக்கா தலையிட்டால், அந்நாட்டுக்கு சரிசெய்ய முடியாத அளவுக்கு சேதம் ஏற்படும்'' என்று காமெனி எச்சரிக்கை விடுத்தார். ''சியோனிஸ்டுகளுக்கு இரக்கம் காட்ட முடியாது'' என்றும் அவர் கூறினார்.

அவரது அறிக்கையை ஈரான் அரசு தொலைக்காட்சி சேனல் வெளியிட்டது. இதுபோல், ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், ''போரில் அமெரிக்கா தலையிட்டால், முழுஅளவிலான போராக வெடிக்கும்'' என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஈரான் ராணுவ தளபதி அப்துல் ரஹிம் மவுசவி, ''இதுவரை எச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையாக தாக்குதல் நடத்தினோம். விரைவில், தண்டனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று கூறி இருந்தார்.ஈரானின் அண்டை நாடுகளில் அமெரிக்க ராணுவம் முகாமிட்டுள்ளன. கூடுதல் போர் விமானங்களையும் அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. அமெரிக்க நிலைகளை தாக்கினால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமைதி காரணங்களுக்காக யுரேனியம் செறிவூட்டும் பணியை தொடர்ந்து மேற்கொள்வோம் என்று ஜெனீவாவுக்கான ஈரான் தூதர் அலி பஹ்ரெனி தெரிவித்துள்ளார். இதனால், இருதரப்பும் விட்டுக்கொடுப்பதாக தெரியவில்லை.இதற்கிடையே, போர் தொடங்கியவுடன் மூடப்பட்ட டெல் அவிவ் சர்வதேச விமான நிலையத்தை இஸ்ரேல் மீண்டும் திறந்துள்ளது. லர்னாகா, சைப்ரஸ் ஆகிய இடங்களில் இருந்து வந்த 2 விமானங்கள் அங்கு தரை இறங்கின. டிரம்பும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகுவும் தொலைபேசியில் பேசினர்.

இந்நிலையில் ஈரானின் உச்ச தலைவர் அமெரிக்காவை தாக்குவதாக எச்சரித்து, சரணடையுமாறு டிரம்பின் அழைப்பை நிராகரித்த பின்னர், ஈரானிய அணுசக்தி நிலையங்களைத் தாக்கும் முடிவை அமெரிக்கா நெருங்கி வருகிறதா என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிடம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த அவர், "நான் அதைச் செய்யலாம். செய்யாமலும் இருக்கலாம். அதாவது, நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை" இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையேயான போரை நான் நிறுத்தியுள்ளேன். போரை நிறுத்துவதற்கு, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் முக்கிய காரணம்" என்றார். முன்னதாக மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை ஏற்க முடியாது என டிரம்பிடம் பிரதமர் மோடி தெளிவுப்படுத்தியிருந்த நிலையில், டிரம்ப் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story