ஈரான் மீது தாக்குதல் நடத்த தனிப்பட்ட முறையில் டிரம்ப் ஒப்புதலா? வெளியான தகவல்


ஈரான் மீது தாக்குதல் நடத்த தனிப்பட்ட முறையில் டிரம்ப் ஒப்புதலா? வெளியான தகவல்
x

ஈரான் மீது தாக்குதல் நடத்த தனிப்பட்ட முறையில் டிரம்ப் ஒப்புதல் தெரிவித்ததாகவும் எனினும் இவ்விவகாரத்தில் இறுதி உத்தரவை நிறுத்தி வைத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன்,

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 13-ந்தேதி ஈரான் மீது இ்ஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. அணுசக்தி மையங்களையும், ராணுவ நிலைகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதிலடியாக தாக்குதலில் ஈடுபட்டது.இஸ்ரேல் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து ஈரான் தினந்தோறும் அறிவிப்பது இல்லை. கடைசியாக, கடந்த 16-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில், 224 பேர் பலியானதாகவும், 1,277 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்பட்டு இருந்தது.ஆனால், வாஷிங்டனில் உள்ள ஈரானிய மனித உரிமைக்குழு, ஈரானில் இதுவரை 585 பேர் பலியாகி இருப்பதாகவும், 1,300-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் கூறியுள்ளது.அதுபோல், ஈரான் இதுவரை 400 ஏவுகணைகளையும், நூற்றுக்கணக்கான டிரோன்களையும் வீசி தாக்கி உள்ளது. அத்தாக்குதலில் இஸ்ரேலில் 24 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நேற்று 6-வது நாளாக இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் நீடித்தது. இஸ்ரேல் போர் விமானங்கள், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் 17-ந்தேதி இரவிலும், 18-ந்தேதி அதிகாலையிலும் குண்டு மழை பொழிந்தன. யுரேனியம் செறிவூட்டும் மையமும், ஏவுகணை உதிரிபாகங்கள் தயாரிக்கும் இடமும் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. ஈரான் துணை ராணுவ புரட்சிப்படை தலைமையகம் அமைந்துள்ள ஹகிமியே பகுதியிலும் தாக்குதல் நடந்தது. மேற்கு ஈரானில் ஏவுகணை சேமித்து வைக்கும் இடங்களிலும், ஏவுகணை லாஞ்சர் மீதும் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இஸ்ரேலுக்கு பதிலடியாக, ஈரான் ஏவுகணைகளை அலைஅலையாக வீசி தாக்குதல் நடத்தியது. அவற்றில் 10 ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.

இத்தகைய பதற்றமான சூழலில், ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மூத்த உதவியாளர்களிடம் கூறும் போது, ஈரான் மீது தாக்குதல் நடத்த ஒப்புதல் தெரிவித்து இருப்பதாகவும் எனினும், இறுதி உத்தரவை இன்னும் பிறப்பிக்கவில்லை என்று கூறியதாக அமெரிக்கவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை கைவிடுகிறதா? என பொறுத்து இருந்து பார்க்க இருப்பதாகவும் அதன்பிறகு முடிவு செய்ய டிரம்ப் திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. முன்னதாக டிரம்ப் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ஈரான் விவகாரத்தில் நான் என்ன செய்யப்போகிறேன் என்று யாருக்கும் தெரியாது" எனக்கூறியிருந்தார்.

1 More update

Next Story