பாகிஸ்தான்: துணை ராணுவ தலைமையகத்தில் தற்கொலைப்படை தாக்குதல் - 3 ராணுவ வீரர்கள் பலி

தற்கொலைப்படை தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.
லாகூர்,
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் பெஷாவர் நகரில் துணை ராணுவப்படையின் தலைமையகம் உள்ளது. இந்த தலைமையகத்தில் இன்று காலை ராணுவ வீரர்கள் வழக்கமான படை அணிவகுப்பு நடத்தினர்.
அப்போது, திடீரென துணை ராணுவ தலைமையகத்திற்குள் 3 பயங்கரவாதிகள் துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்தனர். துணை ராணுவ தலைமையக வாசல் வழியாக பயங்கரவாதிகள் நுழைந்தனர். அப்போது ஒரு பயங்கரவாதி தனது உடலில் கட்டி வந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்தான். பயங்கரவாதி நடத்திய இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்
. எஞ்சிய 2 பயங்கரவாதிகளும் துணை ராணுவ தலைமையகத்திற்குள் நுழைந்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்த முயன்றனர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த வீரர்கள், பயங்கரவாதிகள் இருவரையும் சுட்டு வீழ்த்தினர். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அதேவேளை, தற்கொலைப்படை தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.






