தென் கொரிய அதிபர் யூன் சுக்-யியோல் பதவி நீக்கம்

தென் கொரிய அதிபர் யூன் சுக்-யியோலை பதவி நீக்கம் செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சி்யோல்,
தென்கொரியாவில் எதிர்க்கட்சியினர் வடகொரியாவுடன் இணைந்து நாடாளுமன்றத்தை முடக்க சதித்திட்டம் தீட்டுவதாகக் கூறி, அதிபர் யூன் சுக் இயோல் கடந்த டிசம்பர் மாதத்தில் ராணுவ அவசர நிலையை அறிவித்தார். ராணுவ அவசர நிலைக்கு, நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியதால், சில மணி நேரங்களில் இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.
இதனிடையே, ராணுவ அவசர நிலை உத்தரவு என்பது கிளர்ச்சிக்கு சமமானது என்று யூன் சுக் மீது பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்தநிலையில், இவர் மீதான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று இது குறித்து தீர்ப்பளித்த நீதிமன்றம், தென் கொரிய அதிபர் யூன் சுக்-யியோலை பதவி நீக்கம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இராணுவச் சட்டத்தை அறிவித்ததன் மூலம் அவர் அடிப்படை உரிமைகளை மீறியதாகக் கூறி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பதவி நீக்கம் உறுதி செய்யப்பட்ட செய்தியை அறிந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் கொண்டாடி ஆரவாரம் செய்தனர். தென் கொரிய அதிபர் யூன் சுக்-யியோல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அடுத்த இரு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.