வடகொரியாவின் எச்சரிக்கையை மீறி கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கிய தென்கொரியா

அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து நடைபெறும் பயிற்சி வருகிற 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
சியோல்,
கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை, அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா பதற்றத்தை தூண்டுகின்றது. இதனை சமாளிக்க தென்கொரியா அவ்வப்போது கூட்டுப்போர் பயிற்சியை நடத்துகிறது. இது தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. எனவே இந்த பயிற்சியை நடத்தக்கூடாது என வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்த பயிற்சி அவசியம் என தென்கொரியா கருதுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான கூட்டுப்போர் பயிற்சி தென்கொரியாவின் ஜெஜு தீவில் தொடங்கியது. அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து நடைபெறும் இந்த பயிற்சி வருகிற 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கடல், வான் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகள் நடத்தப்படும் என தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. அதேசமயம் இந்த பயிற்சி தங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.