ஆபரேசன் சாகர்பந்து... இலங்கையில் சிக்கி தவித்த இந்திய பயணிகள் பாதுகாப்பாக மீட்பு

இலங்கையில் சிக்கி தவிக்கும் இந்திய பயணிகள் அவசர உதவி எண் +94 773727832-ஐ தொடர்பு கொள்ளலாம் என அறிக்கை தெரிவிக்கின்றது.
கொழும்பு,
துபாயில் இருந்து 150 தமிழர்கள் உள்ளிட்ட 300 பயணிகளுடன் விமானம் ஒன்று இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. இலங்கை வழியே இந்தியா வர இருந்த விமானம், இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு தரையிறங்கியது. எனினும், வங்க கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவான டிட்வா புயல் எதிரொலியாக கனமழை பெய்தது.
இதனால், இலங்கையில் விமானம் மற்றும் ரெயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால், இந்தியர்களை ஏற்றி வந்த விமானம் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. 150 தமிழர்கள் உள்ளிட்ட 300 பயணிகளும் கடந்த 5 நாட்களாக கொழும்பு விமான நிலையத்திலேயே சிக்கி தவித்தனர்.
அவர்களுக்கு போதிய உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. எங்களை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என இந்திய பயணிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவின் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மூலம் இலங்கையில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். இதனை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியும் உறுதிப்படுத்தி உள்ளது. அந்த பதிவில், ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை புன்னகையை வரவழைத்து உள்ளது.
கொழும்புவில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் சிக்கியுள்ள இந்திய பயணிகள் அடங்கிய கடைசி குழுவினரும், பாரத் மாதா கி ஜெய் என முழங்கியபடி, திருவனந்தபுரம் புறப்பட்ட இந்திய விமான படையின் விமானத்தில் ஏறினர். அப்போது, இந்திய தூதர் சந்தோஷ் ஜா அவர்களை வழியனுப்பி வைத்துள்ளார் என பதிவிட்டு உள்ளது.
இலங்கையில் வேறு எந்த இந்திய பயணியாவது இருக்கிறார் என்றால், அவர் அவசர உதவி எண் +94 773727832-ஐ தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. இதுவரை (ஞாயிற்று கிழமை) இந்திய விமான படை 21 டன்கள் நிவாரண பொருட்கள் மற்றும் தேசிய பேரிடர் நிவாரண குழுவை சேர்ந்த 80 பேரை அனுப்பியுள்ளது.






