ரஷிய எண்ணெய் விவகாரத்தில் உதவாவிட்டால்... இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

இந்திய பொருட்களுக்கு ஏற்கனவே 50 சதவீதம் வரியை டிரம்ப் நிர்வாகம் விதித்துள்ளது.
வாஷிங்டன்,
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். எனினும், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நலன் கருதியே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எந்த ஒரு வெளிப்புற அழுத்தத்திற்கும் பணிய மாட்டோம் என இந்தியா கூறி வருகிறது. ரஷியாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்து, அந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவுகின்றன என்பது டிரம்பின் குற்றச்சாட்டாக உள்ளது.
இதனால், இந்தியாவுக்கு எதிராக 50 சதவீதத்திற்கும் மேல் டிரம்ப் வரி விதித்துள்ளார். இந்த நிலையில், ரஷியா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவை மீண்டும் டிரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், “ ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் அவர்கள் ( இந்தியா) எங்களுக்கு உதவவில்லை என்றால் வரியை நாங்கள் அதிகரிப்போம்.
இந்தியா எங்களை சந்தோஷப்படுத்த வேண்டும். பிரதமர் மோடி மிகச்சிறந்த மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பதை மோடி அறிவார். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது மிகவும் முக்கியம். அவர்கள் வர்த்தகம் செய்தால், விரைவில் அவர்கள் மீது வரியை உயர்த்துவோம்” என்றார்.






