இலங்கையில் கனமழை, நிலச்சரிவு: 33 பேர் பலி; 44 பேர் மாயம்

இலங்கையில் கனமழை, நிலச்சரிவு தொடர்ச்சியாக 1,158 குடும்பங்களும், 4,008 தனிநபர்களும் பாதிப்படைந்து உள்ளனர்.
கொழும்பு,
இலங்கையில் கடந்த 17-ந்தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் சேர்ந்து கொண்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை எதிரொலியாக, பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டது.
இலங்கையில் கனமழையில் சிக்கி 33 பேர் வரை பலியாகி உள்ளனர். 44 பேரை காணவில்லை. 10 பேர் வரை காயமடைந்து உள்ளனர் என பேரிடர் மேலாண் மையம் வெளியிட்ட சமீபத்திய தகவல் தெரிவிக்கின்றது. இதனால் மொத்தம் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதில் பதுல்லா மாவட்டத்தில் அதிக அளவாக 19 பேர் பலியாகி உள்ளனர்.
இதேபோன்று, கனமழை தொடர்ச்சியாக 1,158 குடும்பங்களும், 4,008 தனிநபர்களும் பாதிப்படைந்து உள்ளனர். 3 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்து விட்டன. 381 வீடுகள் பகுதியளவாக சேதமடைந்து உள்ளன. பொதுமக்கள் அவசர உதவிக்கு 117 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயகே, மீட்பு பணிகளை முடுக்கி விடும்படியும் மற்றும் தடையில்லா நிவாரண உதவி கிடைக்கவும் வழி செய்திடும்படி அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு உள்ளார். மீட்பு பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






