பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நலமாக உள்ளார் - சகோதரி தகவல்

இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டார்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி தலைவராக இருந்தவர் இம்ரான் கான். பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் என்ற பெயரில் கட்சி தொடங்கி அந்த நாட்டின் பிரதமராக பதவியேற்றார். பதவியில் இருந்தபோது வெளிநாட்டு தலைவர்கள் கொடுத்த பரிசு பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக ‘தோஷ்கானா’ வழங்கில் கைதானார். பதவி பறிக்கப்பட்டு பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் 2023-ம் ஆண்டு அடைக்கப்பட்டார்.
தனியறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை சந்திக்க உறவினர்களுக்கு கடந்த ஓராண்டாக அனுமதியளிக்கப்படவில்லை. இதனால் அவர் சித்ரவதை செய்யப்பட்டு சிறையிலேயே இறந்துவிட்டதாக யூகங்கள் கிளம்பின. இந்தநிலையில் நேற்று இம்ரான் கான் சகோதரி உஸ்மாவுக்கு இம்ரான் கானை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது.
சிறையில் அவரை சந்தித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர், “இம்ரான் கான் நலமுடன் உள்ளார். ஆனால் தனியறையில் அடைக்கப்பட்டுள்ளதால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். சிறை வளாகத்தில் நடமாடவும் அதிக நேரம் தரப்படுவதில்லை” என்றார்.






