எத்தியோப்பியா சுற்றுப்பயணம் நிறைவு: ஓமன் நாட்டுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கப்பட்டது.
அட்டிஸ் அபாபா,
பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் ஜோர்டான் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு, அந்நாட்டின் மன்னர் அப்துல்லா-II முன்னிலையில் நடைபெற்ற இந்தியா - ஜோர்டான் முதலீட்டாளர் சந்திப்பில் உரையாற்றினார். மேலும் இந்தியா - ஜோர்டான் இடையே ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஜோர்டான் பயணத்தை முடித்துவிட்டு, பிரதமர் மோடி எத்தியோபியா சென்றடைந்தார். இந்த பயணத்தின்போது, இந்தியா-எத்தியோப்பியா இடையிலான இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து எத்தியோபியா பிரதமர் அபி அகமது அலியுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து எத்தியோப்பியாவின் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
மேலும், பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருதான 'தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா' வழங்கப்பட்டது. இந்த கவுரவ விருதை பெறும் முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் கிடைக்க பெற்ற 28-வது உயரிய விருது இதுவாகும்.
இந்நிலையில், எத்தியோப்பியா சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஓமன் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அந்நாட்டின் மன்னரும், பிரதமருமான சுல்தான் ஹைதம் பின் தாரிக்கின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஓமனுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின்போது, இந்தியா-ஓமன் இடையிலான மூலோபாயப் பங்களிப்பை வலுப்படுத்துவது குறித்தும், வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவை ஏற்படுத்துவது குறித்தும் சுல்தானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.






