மோடிக்கு சமஸ்கிருத இலக்கண புத்தகத்தை பரிசளித்த குரோஷியா பிரதமர்

குரோஷியா பிரதமர் பென்கொவிக், விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார்.
சாக்ரெப்,
பிரதமர் மோடி அரசு மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ், கனடா மற்றும் ஐரோப்பிய நாடான குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி முதலாவதாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து பிரதமர் மோடி கனடா சென்றார். கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் நடந்த ஜி-7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் கனடா பிரதமர், இத்தாலி, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.
கனடா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து குரோஷியா புறப்பட்டார். குரோஷியா விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குரோஷியா பிரதமர் பென்கொவிக், விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார்.
இந்த சந்திப்பின்போது, வரலாற்றில் முதல்முறையாக அச்சிடப்பட்ட சமஸ்கிருத இலக்கண புத்தகத்தின் பிரதியை பிரதமர் மோடிக்கு பென்கொவிக் பரிசளித்தார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விஞ்ஞானியும், மிஷனரியுமான பிலிப் வெஸ்டின்(1748–1806) லத்தீன் மொழியில் 1790-ம் ஆண்டு எழுதி முதல் முறையாக அச்சிட்ட சமஸ்கிருத இலக்கண புத்தகத்தின் பிரதியை இந்திய பிரதமர் மோடியிடம் வழங்கினேன்.
பிலிப் வெஸ்டின் இந்தியாவில் வாழ்ந்தபோது, கேரள பிராமணர்கள் மற்றும் உள்ளூர் கையெழுத்துப் பிரதிகள் மூலம் அவருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இது குரோஷியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான ஆரம்பகால கலாசார உறவுகளின் அடையாளமாக விளங்குகிறது.
மேலும் டாக்டர் சினிஷா கிரிக் எழுதிய "குரோஷியா & இந்தியா, பைலேட்டிரல் நேவிகேட்டர் பார் டிப்ளமேட்ஸ் அண்ட் பிசினஸ்" என்ற புத்தகத்தையும் வழங்கினேன். இந்த புத்தகம் நமது இரு நாடுகளின் சாதனைகளையும், நாம் இன்னும் உணரக்கூடிய ஆற்றலையும் பிரதிபலிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் பென்கொவிக்கிற்கு நன்றி. இது உண்மையிலேயே இந்தியாவிற்கும், குரோஷியாவிற்கும் இடையிலான நீடித்த அறிவுசார் மற்றும் கலாசார உறவின் சின்னமாகும். இனி வரும் காலங்களில் இந்த உறவு இன்னும் வலுப்பெறட்டும்" என்று தெரிவித்துள்ளார்.