அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி கார் உற்பத்தி ஆலையில் வேலை செய்த வெளிநாட்டினர் 475 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்களில் 300க்கும் மேற்பட்டோர் தென்கொரிய நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை கைது செய்து அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, அந்நாட்டின் ஜார்ஜியா மாகாணத்தில் தென்கொரிய நிறுவனமான ஹூண்டாய் கார் உற்பத்தி ஆலை உள்ளது. இங்கு மின்சார காருக்கான பேட்டரி உற்பத்தி ஆலை உள்ளது.
இந்நிலையில், ஜார்ஜியாவில் உள்ள ஹூண்டாய் கார் உற்பத்தி ஆலையில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்து வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கார் உற்பத்தி ஆலையில் நேற்று பாதுகாப்புப்படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுற்றுலா விசாவில் அமெரிக்காவிற்கு வந்து சட்டவிரோதமாக கார் உற்பத்தி ஆலையில் வேலை செய்து வந்த வெளிநாட்டினர் 475 பேரை பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 300க்கும் மேற்பட்டோர் தென்கொரிய நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.
அமெரிக்காவில் 350 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய தென்கொரியா திட்டமிட்டுள்ள நிலையில் கைது நடவடிக்கை இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.