போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் 54 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்


போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் 54 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்
x

கட்டிட இடிபாடுகளுக்கு நடுவே மேடை அமைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் 54 ஜோடிகளுக்கு உற்சாகமாக திருமணம் நடைபெற்றது.

காசா,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டது. 2 ஆண்டுகள் நடந்த போரில் காசாவில் 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

இந்த போரால் காசா முழுவதுமாக உருக்குலைந்து போனது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்காக தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காசாவில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி சூழலை கருத்தில் கொண்டு போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுக்கு சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் முயற்சியால் கடந்த அக்டோபர் 10-ந்தேதி இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து, காசா மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க ஐ.நா. சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் 54 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசாவின் கான் யூனிஸ் பகுதியில், வெடிகுண்டு தாக்குதல்களால் சேதமடைந்த கட்டிட இடிபாடுகளுக்கு நடுவே மேடை அமைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 54 ஜோடிகளுக்கு உற்சாகமாக திருமணம் நடைபெற்றது. மணமக்கள் தங்கள் கையில் பாலஸ்தீன கொடிகளை ஏந்தியிருந்தனர். அங்கு திரண்டு வந்திருந்த பொதுமக்கள் திருமண ஜோடிகளை வாழ்த்தி மகிழ்ந்தனர்.

1 More update

Next Story