வடதமிழகம் நோக்கி நகரும் ‘டிட்வா' புயல்... 9 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை


வடதமிழகம் நோக்கி நகரும் ‘டிட்வா புயல்... 9 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை
x

புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை,

‘டிட்வா' புயல்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை 11.30 மணியளவில் புயலாக வலுவடைந்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

இந்த புயலுக்கு ‘டிட்வா' என பெயரிடப்பட்டு உள்ளது. ஏமன் நாடு இந்த பெயரை பரிந்துரைத்து இருக்கிறது. புயல் தற்போது புதுச்சேரிக்கு தெற்கு - தென்கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 620 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டு இருக்கிறது. இது 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது.

‘டிட்வா' புயலானது அடுத்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகிற 30-ந்தேதி அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை அடையக்கூடும் என ஆய்வு மையம் கணித்துள்ளது.

மழைக்கான வாய்ப்பு அதிகம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும். இதுதவிர ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் மிக கனமழை

நாளை (சனிக்கிழமை) தமிழக வடமாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.

திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னையில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

ரெட் அலர்ட்

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வட மாவட்டங்களில் சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழையும் பெய்யக்கூடும்.

அதிகனமழை வரை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையையும், மிக கனமழை வரை பதிவாகும் இடங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையையும், கனமழை வரை பெய்யும் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையையும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு, வானிலை ஆய்வு மையம் நிர்வாக ரீதியாக விடுத்து இருக்கிறது. அந்த வகையில் இன்றும், நாளையும் 9 மாவட்டங்களில் அதி கனமழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்றும், நாளையும் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை வீசக்கூடும். ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் வரை மணிக்கு 50 முதல் 80 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

1 More update

Next Story