அதி கனமழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்களுக்கு " ரெட் அலர்ட்"..?

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.
சென்னை,
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்றும் நிலவுகிறது. இதன் காரணங்களால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை நீடிக்கும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகம் உள்பட தென்மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.
இதனிடையே கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த 3 நாட்கள் அதி கனமழைக்கான "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்ட நிலையில் நாளையும், நாளை மறுநாளும் (மே 29, 30) மீண்டும் அதி கன மழைக்கான "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று (மே 28ம் தேதி) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் (ஆரஞ்சு அலர்ட்) என்றும், குமரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் ( மஞ்சள் அலர்ட்) என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.