விழுப்புரம்: பஸ்சில் பெண் பயணியிடம் ரூ.15 லட்சம் நகைகள் திருட்டு

கோப்புப்படம்
பையை சரிபார்த்தபோது அதிலிருந்த நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
விழுப்புரம்,
சென்னை தாம்பரம் அருகே உள்ள பசுவஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலன் மனைவி சுபாஷினி(வயது45). இவர் விழுப்புரம் அருகே கோனூரில் நடந்த உறவினரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக தனது மகன் அனிஷ், மகள் நவ்யா ஆகியோருடன் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து அரசு விரைவு பஸ்சில் விழுப்புரத்திற்கு புறப்பட்டார். அவர் தன்னுடைய 18¼ பவுன் எடையுள்ள நகைகளை ஒரு பையில் வைத்துக்கொண்டு பஸ்சில் பயணம் செய்தார்.
இந்நிலையில் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு மாம்பழப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் பஸ்சில் இருந்து சுபாஷினி மற்றும் அவரது மகன், மகள் கீழே இறங்கினர். அப்போது தான் வைத்திருந்த பையை சுபாஷினி சரிபார்த்தபோது அதிலிருந்த நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பஸ் பயணத்தின்போது யாரோ மர்மநபர்கள், சுபாஷினி வைத்திருந்த பையில் இருந்த நகைகளை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.15 லட்சமாகும். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.






