இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-12-2025

கோப்புப்படம்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 11 Dec 2025 4:41 PM IST
திருப்பரங்குன்றத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதி
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபமேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டிச.13ஆம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்ள மதுரை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
திருப்பரங்குன்றம் ஊர் மக்கள் சார்பாக இரா.பிரபு தாக்கல் செய்த மனுவில், காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட சன்னதி தெருவில் காலை 9 முதல் 5 மணி வரை உண்ணாவிரத இருக்க நீதிபதி ஸ்ரீமதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- 11 Dec 2025 4:39 PM IST
தர்காவிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தர்காவிற்கு மீண்டும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- 11 Dec 2025 3:51 PM IST
மு.கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திமுக கோரிக்கை
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இதுவரை திமுகவை சேர்ந்த யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. ஆட்சி நிர்வாகத்தில் பிற இந்திய மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி என மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறி உள்ளார்.
- 11 Dec 2025 3:18 PM IST
பிரதான சாலை திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு
சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு பிரதான சாலை திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரேஷன் கடைகளுக்கு அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி ஓட்டுநர் காயங்களுடன் உயிர்தப்பினார்.
- 11 Dec 2025 3:14 PM IST
எஸ்.ஐ.ஆர் வழக்கு - ஜனவரி இறுதியில் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட்டு
" எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் புதிதாக எந்த வழக்குகளும் அனுமதிக்கப்படாது. இம்மாதம் வாதங்களை முடித்து, ஜனவரி இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூரியகாந்த் அறிவித்துள்ளார்.
- 11 Dec 2025 3:11 PM IST
பனையூர்: காத்திருக்கும் தவெக உறுப்பினர்கள்
பனையூரில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து மனு அளிக்க 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அலுவலகத்துக்கு வெளியே காத்திருக்கின்றனர். மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்று வருவதால் உள்ளே அனுமதி இல்லை என தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
- 11 Dec 2025 2:33 PM IST
அதிவேகம் -நொடியில் பிரிந்த கல்லூரி மாணவியின் உயிர்
செங்கல்பட்டு: திருப்போரூர் அருகே நின்றிருந்த லாரி மீது சொகுசு கார் மோதிய விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி மிஸ்பா பாத்திமா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
கவலைக்கிடமான நிலையில் 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு காரில் புதுச்சேரி சென்ற 10 மாணவர்கள், சென்னை திரும்பும்போது போட்டி போட்டு காரை இயக்கியதால் விபரீதம் ஏற்பட்டுள்ளது.
- 11 Dec 2025 2:30 PM IST
செஞ்சி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்து
விழுப்புரம்: செஞ்சி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் மாருதி ஸ்விப்ட் கார், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடிக்கும்போது செம்மேடு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் இல்லை, விபத்து குறித்து சத்தியமங்களம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 11 Dec 2025 2:29 PM IST
காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி சஸ்பெண்ட்
காஞ்சிபுரம் மாவட்டம் நீதிபதி செம்மலை சஸ்பெண்ட் செய்து சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
- 11 Dec 2025 2:25 PM IST
கொடைக்கானல்: கல்லறை மேடு பகுதியில் உள்ள கடைகளில் பயங்கர தீ விபத்து
கொடைக்கானல்: கல்லறை மேடு பகுதியில் உள்ள பழக்கடைகள் மற்றும் சாக்லேட் வியாபாரம் செய்யக்கூடிய சுமார் 5க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
















