தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது எனும் கருத்தில் மன்னிப்புக்கு இடம் இல்லை: கமல்ஹாசன்

கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சென்னை ,
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' திரைப்படம் வரும் ஜூன் 5-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி(கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்" என்று தெரிவித்தார். இந்நிலையில், கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது எனும் கருத்தில் மன்னிப்புக்கு இடம் இல்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ,
அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது. இது பதில் அல்ல, விளக்கம். வரலாற்று ஆய்வாளர்கள், மொழியாளர்கள், தொல்லியர் நிபுணர்களிடம் இதனை விட்டுவிடுவோம் . நான் கூறியதற்கு இன்னொரு கோணமும் இருக்கலாம். அதை வல்லுநர்களே கூற வேண்டும். என்னை போன்ற அரசியல்வாதிகள் பேச வேண்டிய விஷயம் இல்லை இது. இதற்கு வல்லுனர்கள் பதில் கூறுவார்கள்.என தெரிவித்தார் .