ஆர்.எஸ்.எஸ். - பாஜகவின் முயற்சிகளை தமிழக அரசுடன் இணைந்து மதுரை மக்கள் முறியடிப்பார்கள் - கனிமொழி

கோப்புப்படம்
தமிழ்நாட்டில் மதவாத அரசியலை செய்துவிட ஆர்.எஸ்.எஸ். - பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகின்றன என்று கனிமொழி கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். - பாஜகவின் முயற்சிகளை தமிழக அரசுடன் இணைந்து மதுரை மக்கள் முறியடிப்பார்கள் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தங்கள் மதவாத அரசியலை தமிழ்நாட்டில் செய்துவிட ஆர்.எஸ்.எஸ். - பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. அதை தமிழ்நாடு அரசுடன் இணைந்து மதுரை மக்களும் முறியடிப்பார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை ஏற்க மறுக்கும் ஆகம விதிகள், கார்த்திகை திருநாள் முடிந்த பின்னும் தீபம் ஏற்ற அனுமதிக்கின்றன என்பதுதான் வியப்பாகவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






