குரூப்-4 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு அக்டோபரில் அறிவிப்பு வெளியாகிறது

கோப்புப்படம்
குரூப்-4 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு (2026) அக்டோபரில் அறிவிப்பு வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. ஆண்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு, தேர்வு நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) செய்து வருகிறது. அதன்படி, குரூப்-1, 2, 2ஏ, 4, 5 என பல்வேறு பதவிகளுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு அட்டவணையை வெளியிட்டு அதன்படி, பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிடுவதும், தேர்வுகளை நடத்துவதுமான நடவடிக்கைகளை எடுக்கிறது.
அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான அட்டவணையை https://tnpsc.gov.in/english/annual-planner.html என்ற இணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டு இருக்கிறது.
அதில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு (2026) மே மாதம் 20-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆகஸ்டு 3-ந்தேதி தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்-1 பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 23-ந்தேதி வெளியிடப்படும் என்றும், தேர்வு செப்டம்பர் 6-ந்தேதியும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குரூப்-2, 2ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆகஸ்டு 11-ந்தேதி வெளியிடப்பட்டு, அக்டோபர் 25-ந்தேதி தேர்வு நடத்தப்படும். அதிகம் பேர் விண்ணப்பிக்கக் கூடிய குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிப்பு அக்டோபர் 6-ந்தேதி வெளியாகிறது. தேர்வு டிசம்பர் 20-ந்தேதி நடத்தப்பட உள்ளது. இதேபோல், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் பணிகளுக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிப்பு வெளியிடும்போது தெரிவிக்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது.






