திருப்பரங்குன்றத்தில் பதற்றம்: 144 தடை உத்தரவு - என்ன நடந்தது?

தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டக்கார்கள் செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு காவலர் காயம் அடைந்துள்ளார்.
மதுரை,
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு ஐகோர்ட்டு மதுரை அமர்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றாததால் வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள், மத்திய தொழிலக பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன் இன்று மாலை உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மனுதாரரான ராமரவிக்குமார், சக மனுத்தாரர்கள், இந்து அமைப்பினர் 60-க்கும் மேற்பட்ட சிஐஎஸ்எப் வீரர்களுடன் இன்று இரவு திருப்பங்குன்றம் சென்றனர். முருகன் கோவிலுக்கு அருகிலுள்ள பழனியாண்டவர் கோயில் பாதை வழியாக மலை உச்சிக்கு செல்ல முயன்றனர். அப்போது, அவர்களை அங்கு போலீஸார் தடுப்பு வேலிகளை போட்டு மறைத்து அனுமதி மறுத்தனர்இதனை கண்டித்து இந்து அமைப்புகள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டன. நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படவில்லை என்று கூறி இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி முழக்கம் இட்டனர். அப்போது திடீரென தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டக்கார்கள் செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு காவலர் காயம் அடைந்துள்ளார். தீபம் ஏற்றுவதற்காக சென்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, போலீசார் தடுப்பை மீறி, மலைப் பாதையில் ஓடிச் சென்றவர்கள் பிடித்து அழைத்து வரப்பட்டனர்.
மலை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கிடையே, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிகப்பட்டுள்ளது. ஏராளமானோர் திரண்டுள்ள நிலையில், திருப்பரங்குன்றத்தில் கூட்டம் நடத்த தடை விதித்து 144 தடை உத்தரவினை மதுரை காவல் ஆணையம் பிறப்பித்துள்ளார். கோர்ட்டு உத்தரவுப்படி, பாதுகாப்புக்கு வந்த சிஐஎஸ்எப் வீரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 144 தடை உத்தரவு உள்ளதாலும் அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாலும் மலைக்கு செல்ல அனுமதிக்க முடியாது என போலீஸ் கமிஷனர் கூறினார்.
ஆனால், 144 தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னரே, நீதிபதி உத்தரவு பிறப்பித்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால், அதனை போலீசார் ஏற்கவில்லை. இதனால் இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட் கிளை நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, நாளை தமிழக அரசின் முறையீட்டை முதல் வழக்காக விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.






