கரூர் வெண்ணைமலை பகுதியில் மக்கள் குடியிருப்புகளை அகற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும் - சீமான்


கரூர் வெண்ணைமலை பகுதியில் மக்கள் குடியிருப்புகளை அகற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும் - சீமான்
x

கோப்புப்படம் 

மக்களைத் துன்புறுத்தி கடவுளை மகிழ்விக்க முடியும் என்பது சிறந்த வழிபாடு ஆகாது என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கரூர், வெண்ணைமலை பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் மேல், பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளைக் கோவில் நில ஆக்கிரமிப்பு என்று கூறி தமிழ்நாடு அரசு அகற்ற முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.

கரூர் வெண்ணைமலை முருகன் கோவில் அருகேயுள்ள 550 ஏக்கர் நிலங்களில் ஏறத்தாழ 1,200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு என்றுகூறி வீடுகளை விட்டு அம்மக்களை திமுக அரசு வெளியேற்ற முயல்வதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். கோவில்கள் நிறைந்த கரூர் மாநகரத்தில் உள்ள பெரும்பாலான கோவில்கள் ஜமீன் உரிமை வழங்கப்பட்டுக் கோவில் தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. ஜமீன் உரிமை பெற்றிருக்கும் தேவஸ்தானத்திற்குக் குறிப்பிட்ட நிலங்களின் மேல் வரிவசூல் செய்யும் உரிமையானது 1802 முதல் சட்டப்படி வழங்கப்பட்டிருந்தது. குடியிருக்கும் உரிமையானது அனுபவத்திலிருந்த விவசாயிகளுக்கு உறுதி செய்யப்பட்டு, தேவஸ்தானத்திலிருந்து ஒவ்வொரு வருவாய் வருடத்திற்கும் வரி வசூல் செய்யப்படுவதோடு, விவசாயிகளுக்குப் பட்டா வழங்கப்பட்டுப் பத்திரப்பதிவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாடு விடுதலை பெற்ற பிறகு நில சீர்திருத்தச் சட்டங்கள், ஜமீன் ஒழிப்புச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு குடி உரிமை பெற்றிருந்த விவசாயிகளுக்கு நில உரிமையை முழுமையாக்க வழிவகைச் செய்யப்பட்டது. ஆனால் தேவஸ்தான நிர்வாகிகள் சிலர் மக்களின் அறியாமையினைப் பயன்படுத்தி, நில சீர்திருத்தச் சட்டங்களின் பலன்கள் மக்களைச் சென்றடைய விடாமல் தடுத்து விட்டனர். அதன் காரணமாக அப்பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் சட்டப்படி பட்டா பெற உரிமை பெற்றிருந்தும் இன்றுவரை பட்டா பெற முடியாமல் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திச் சிலர் உள்நோக்கத்துடன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், திமுக அரசு வலுவான வாதங்களை முன்வைக்கத் தவறியதன் காரணமாக, அவ்விடங்களை ஆக்கிரமிப்பு என்று முடிவு செய்த நீதிமன்றம் குடியிருப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதனையடுத்து மக்களின் வாழ்விடங்களைப் பாதுகாக்க நீதிமன்றத்தில் சரியான வாதங்களை வைக்கத் தீவிரம் காட்டாத திமுக அரசு, நீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி மக்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்ற வீடுகளுக்கு முத்திரை வைக்கும் பணியை அதிவேகமாகச் செய்துவருவது, இந்த அரசும், ஆட்சியும் யாருக்கானது என்ற கேள்வியை எழுப்புகிறது. திமுக அரசிற்கு மக்களின் மீது உண்மையான அக்கறை இருந்திருக்குமானால், தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை மூலம் நீதிமன்றத்தில் உரிய வாதங்களை முன் வைத்து, தக்க ஆவணங்களை அளித்திருந்தால் சொந்த நாட்டு மக்களையே அகதிகள் போல வெளியேற்றும் அவலநிலை ஏற்பட்டிருக்காது.

‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்பதே இறைநெறி கூறும் அறநெறியாகும். எந்தக் கடவுளும் மக்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து, இன்பம் காண வேண்டும் என்பதை விரும்புவதில்லை. மக்களைத் துன்புறுத்தி கடவுளை மகிழ்விக்க முடியும் என்பது சிறந்த வழிபாடும் ஆகாது.

ஆகவே, கரூரில் கோவில் நில ஆக்கிரமிப்பு என்ற பெயரில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களை, அவர்களின் வாழ்விடங்களை விட்டு அகற்றும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட்டு, குடியிருப்புகளை அகற்றும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து மக்களின் வாழ்விடங்களைப் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறன்.

தங்களின் வாழ்விடங்களைப் பாதுகாக்க வெண்ணைமலை பகுதி மக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழுமையான ஆதரவை அளித்துத் துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story