விடுதியில் தங்கி படிக்க பி.சி., எம்.பி.சி. கல்லூரி மாணவர்கள் ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்


விடுதியில் தங்கி படிக்க பி.சி., எம்.பி.சி. கல்லூரி மாணவர்கள் ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 19 Jun 2025 5:18 PM IST (Updated: 19 Jun 2025 5:32 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கல்லூரி விடுதிகளில் சேர்வதற்கு மாணவர்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகள் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் பள்ளி மாணவர், மாணவியர்களுக்காக 29 பள்ளி விடுதிகளும், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்காக 5 அரசு கல்லூரி விடுதிகள் ஆக 34 விடுதிகள் அனைத்து வட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.

விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்:

மேற்சொன்ன பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 வகுப்பு வரை பயில்கின்ற மாணவர், மாணவியர்களும் கல்லூரி/ பாலிடெக்னிக்/ ஐடிஐ விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக்/ ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவர், மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.

பெற்றோர்/ பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மாணவரின் இருப்பிடம் கல்வி நிலையத்திற்கு 8 கி.மீ.க்கு அப்பால் இருக்க வேண்டும். (மாணவியருக்கு இவ்விதி பொருந்தாது)

பள்ளி விடுதிகள் செயல்படும் இடங்கள்:

தூத்துக்குடி, கழுகுமலை, கோவில்பட்டி, காயாமொழி, வெள்ளாளன்விளை, கீழராமசாமிபுரம், குலசேகரன்பட்டினம், மணப்பாடு, பணிக்க நாடார் குடியிருப்பு, விளாத்திகுளம், கே.தங்கம்மாள்புரம், புதூர், சாத்தான்குளம், கொம்மடிக்கோட்டை, ஆனந்தபுரம், படுக்கப்பத்து, கருங்குளம், எட்டயபுரம், சுப்பம்மாள்புரம், பெரியசாமிபுரம் மற்றும் கயத்தார் பகுதிகளில் இயங்குகின்றன.

கல்லூரி விடுதிகள்:

தூத்துக்குடி-போல்டன்புரம் (ம) தாளமுத்துநகர், கோவில்பட்டி, நாகம்பட்டி ஆகிய இடங்களில் விடுதிகள் செயல்படுகின்றன.

விடுதிகளில் வழங்கப்படும் சலுகைகள்:

தினசரி நிகழ்வுகளை அறிந்துகொள்ள ஒவ்வொரு விடுதிக்கும் 2 தமிழ் மற்றும் 1 ஆங்கில நாளிதழ்கள் நூலகப் புத்தகங்கள் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் வழங்கப்படுகிறது.

4-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவியருக்கு நான்கு இணைச்சீருடைகள் வழங்கப்படுகிறது. 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவர், மாணவியருக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் சிறப்பு வழிகாட்டிகள் நூல்கள் வழங்கப்படுகிறது.

அனைத்து விடுதி மாணவ, மாணவியர்களுக்கும் காற்றோட்டத்துடன் கூடிய தங்குமிடம் (ம) இறைச்சி, முட்டையுடன் கூடிய சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது.

மேலும், விடுதிகளில் வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, விளையாட்டு உபகரணங்கள், நீர் சுத்திகரிப்பு கருவி, புத்தக அலமாரி, இன்வெர்ட்டர் கருவி, இரண்டடுக்கு கட்டில்கள், பள்ளி மாணவ, மாணவியருக்கு பாய்கள், கல்லூரியில் பயில்பவர்களுக்கும் ஜமக்காளம் மற்றும் போர்வை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய மாணவ, மாணவியர்கள், விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்/ காப்பாளினிகளிடத்திலோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளுக்கு 14.6.2025 வரையும், கல்லூரி விடுதிகளுக்கு 15.7.2025 வரையும் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகள் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவ, மாணவியர்கள் விடுதியில் சேரும் நேரத்தில் சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்தநேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

எனவே வறுமை நிலையில் வசிக்கும் மாணவ, மாணவியர் கல்வி இடைநிற்றலை தவிர்த்து அரசின் சலுகைகளை அனுபவித்து கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் எனவும் அனைத்து பிரிவினரும் கட்டாயம் கல்வி கற்பதற்கு அவர்களது பெற்றோர்/ பாதுகாவலர் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story