குடியரசு தின விழா: தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி

குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை,
டெல்லியில் ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும்.
அந்தவகையில் 2026 ஜனவரி 26-ம் தேதி, டெல்லியில் உள்ள கடமை பாதையில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுக்க உள்ளன.
இந்த நிலையில், 2026 குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ‘பசுமை மின் சக்தி’ என்ற தலைப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு குடியரசு தின விழா அலங்கார ஊர்திகளில் தமிழ்நாடு பங்கேற்க மத்திய அரசு அனுமதி மறுத்தது. இதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






