பீகாரில் பிரதமர் மோடி பொய் பிரசாரம் - ஆர்.எஸ்.பாரதி பேட்டி


பீகாரில் பிரதமர் மோடி பொய் பிரசாரம் - ஆர்.எஸ்.பாரதி பேட்டி
x
தினத்தந்தி 31 Oct 2025 3:45 PM IST (Updated: 31 Oct 2025 9:34 PM IST)
t-max-icont-min-icon

மோடி, அமித்ஷா ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

சென்னை,

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசிய்தாவது:-

“ அமைதி பூங்காவாக இன்று பல வடமாநிலத்தை சார்ந்தவர்கள் தமிழ்நாட்டில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என நீங்கள் நன்றாக அறிவீர்கள். பொய் பிரசாரத்தின் மூலமாக வாக்குகளை பெற்று விடலாம் என்ற குறுகிய மனப்பான்மையில் ஒரு பிரதமர் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டியவர். பிளவுகள் இருந்தாலும் பிளவுகளை சரிசெய்ய வேண்டிய இடத்தில் பிரதமர் இருக்க வேண்டும். தமிழ்நாட்டிலே சாதாரண நகராட்சி உறுப்பினருக்கு கூட இப்படி பட்ட எண்ணம் வராது.

சாதியின் பெயராலோ, மொழியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, மாநிலம் வாரியாகவோ பிரச்சினைகளை பேசுகின்ற குறுகிய மனப்பான்மை தமிழகத்தில் இருக்கின்ற எந்த கட்சியிலும் உள்ள கவுன்சிலர்களுக்கு கூட வராத எண்ணம் இன்று பிரதமருக்கு ஏற்பட்டு இந்த பிரசாரத்தை செய்துள்ளார்.

இது முதல் அல்ல. ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் ஆங்காங்கே இப்படி பொய்களை சொல்வது கை வந்த கலை. குறிப்பாக மோடி, அமித்ஷா ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள். இதே போல் தான் ஒடிசாவில் தேர்தல் வந்தபோது, தமிழர்களை எல்லாம் திருடர்களை போல சித்தரித்து காட்டினார்.

அதை மிஞ்சுகிற வகையில் அமித்சா சொன்னார் இங்கே வி.கே. பாண்டியன் என்ற தமிழர் தான் ஆட்சி புரிகிறார். ஒடிசாவில் இருக்கும் உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா மானம் இல்லையா. ஒரு தமிழ்நாட்டு காரன் ஆள வேண்டுமா என்று கேட்டவர் அமித்ஷாதான் என்பதை இந்த நாடு மறந்துவிடாது.

ஒடிசா தேர்தலுக்கு எப்படி ஒரு தமிழரை இழிவுபடுத்தி பேசினாரோ. அதேபோல பீகாரிலே தமிழ்நாட்டையும் தமிழர்களையும் குறிப்பாக முதல்-அமைச்சரையும் மையப்படுத்தி இழிவுபடுத்தி பேசி இருக்கிறார்.

மோடிக்கு நான் சவால் விட்டு கேட்கிறேன் தமிழ்நாட்டில் எங்காவது பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டதற்குரிய ஆதாரம் இருந்தால் அவர் வழக்கு போடட்டும் அல்லது எந்தவித நடவடிக்கையும் எடுக்கட்டும். இதேபோல் தான் 2023 ம் ஆண்டு ஒரு புரளியை பரப்பினார்கள்.

பீகார் மாநில மக்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது உண்மையா என அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் அவர் மாநிலத்தை சார்ந்தவர்கள் கொண்ட குழுவை அனுப்பி தமிழகத்தில் ஆய்வு செய்தார். ஆய்வு செய்து அவர்கள் தந்த அறிக்கையை மோடி படித்து பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் பீகாரிகள் நிம்மதியாகவும், சிறப்பாகவும் வாழுகிறார்கள் என்று அந்த அறிக்கையே கூறுகிறது.

ஆனால் இதை கூட ஒரு பிரதமர் புரிந்துகொள்ளாமல் பொய் சொல்கிறார் என்றால் இவர் இந்த நாட்டில் பிரதமராக இருக்கிறார். இந்த நாட்டில் நாம் ஒரு குடிமகனாக இருக்கிறோம் என தலைகுனியும் அளவிற்கு பேசினார்கள். தமிழ்நாட்டை கொஞ்சமா அவமான படுத்தினார்கள்” என பேசியுள்ளார்.

1 More update

Next Story