விஜய்யின் சுற்றுப்பயணத்தை காவல்துறை மூலம் தடுக்க முயற்சி: ஆதவ் அர்ஜுனா

ஜனநாயக நாட்டில் எந்தத் தலைவரும் மக்களை சந்திப்பதை எப்பேர்ப்பட்ட அதிகார சக்தியாலும் தடுக்க முடியாது என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்
சென்னை,
தவெக தலைவர் விஜய் வருகிற செப்.13-ம் திருச்சியில் சட்டப்பேரவை தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கவிருப்பது உறுதியான நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்டுள்ள இடத்தில் பிரச்சாரம் செய்ய திருச்சி மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காவல்துறை மூலம் விஜய் சுற்றுபயணத்தை தடுக்க முனைவதாக தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
தவெக தலைவர் விஜய் வரும் 13 ஆம் தேதி திருச்சியில் இருந்து தனது மக்கள் சந்திப்பு பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தரப்பு இதற்காக அனுமதி கேட்ட நிலையில், காவல்துறை அனுமதி மறுத்ததாக தகவல் வெளியான நிலையில், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்
எம்.ஜி.ஆர், தி.மு.க அராஜக அரசுக்கு எதிராக இயக்கம் கண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தபோது அதை தங்கள் அதிகாரம் கொண்டு அடக்க நினைத்தது அன்றைய ஆளும் அரசு. அந்த அதிகார சக்திகளின் ஆட்டத்திற்கு அடுத்தத் தேர்தலிலேயே முடிவுரை எழுதினார் எம்.ஜி.ஆர். இன்று எங்கள் தலைவரும் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையுமான த.வெ.க தலைவர் விஜய் அவர்களின் சுற்றுப்பயணத்தை தடுக்கும் நோக்கில் தங்கள் அதிகார பலத்தைக் கொண்டு காவல்துறையின் மூலம் நெருக்கடி கொடுக்க முனைகிறது இன்றைய தி.மு.க அரசு.
மக்கள் தலைவராக விஜய்க்கு இருக்கும் பேராதரவை பொறுத்துக்கொள்ள முடியாத அச்சத்தின் வெளிப்பாடாகவே அரசின் இந்த அதிகார அழுத்தத்தை பார்க்கவேண்டியுள்ளது. ஜனநாயக நாட்டில் எந்தத் தலைவரும் மக்களை சந்திப்பதை எப்பேர்ப்பட்ட அதிகார சக்தியாலும் தடுக்க முடியாது. அப்படி தடுக்க நினைத்த அதிகார சக்திகளை மக்களே தூக்கி எறிந்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு நமக்கு சொல்லும் பாடம். மக்களே மகத்தான ஆசான்கள்… அவர்களே உங்கள் அதிகாரத்திற்கு முடிவுரை எழுதுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.