பாமக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அதிமுகவிற்கு அழைப்பு

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக சார்பில் வரும் 17 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னை,
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி வரும் டிசம்பர் 17ம் தேதி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கும் திமுக அரசைக் கண்டித்தும், உடனடியாக சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரியும் பாமக சார்பில் வரும் டிசம்பர் 17ம் தேதி புதன்கிழமை சென்னை எழும்பூர் ராசரத்தினம் திடல் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு வசதியாகவும், வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை இன்னும் வலிமையாகவும், பிரமாண்டமாகவும் வலியுறுத்துவதற்கு வசதியாகவும் டிசம்பர் 17ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருந்த அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்பும் போராட்டத்தை 2026ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி வியாழக்கிழமை நடத்துவதற்கு பாமக முடிவு செய்திருக்கிறது என்று அன்புமனி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அன்புமணி தரப்பு பாமக நடத்தும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாமக வழக்கறிஞர் பாலு, இது தொடர்பாக அன்புமணி எழுதிய கடிதத்தை நேரில் சென்று எடப்பாடி பழனிசாமியிடம் அளித்தார். சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.






