புதிய தொழிலாளர் சட்டங்கள்: வரலாற்றுச் சிறப்புமிக்க மிகப்பெரும் சீர்திருத்தம் - நயினார் நாகேந்திரன்

கோப்புப்படம்
புதிய தொழிலாளர் சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, தொழிலாளர் நலனில் ஒரு முக்கிய மைல்கல் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
75 ஆண்டுகால பழைய 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து, தற்போதைய உலகளாவிய நடைமுறைக்கு ஏற்ப நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது, தொழிலாளர் நலனில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.
புதிய தொழிலாளர் நலச்சட்டங்களின் முக்கிய கூறுகள்:
1. அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம்
2. வேலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நியமனக் கடிதம் வழங்குவது கட்டாயம்.
3. சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கிக் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் PF, ESIC, காப்பீடு.
4. 40 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் இலவச உடல்நலப் பரிசோதனை.
5. கூடுதல் நேர வேலைக்கு 2 மடங்கு ஊதியம்.
6. பணிக்கொடை பெறுவதற்கான தகுதிக்காலம் 5 ஆண்டிலிருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது.
7. தகுந்த பாதுகாப்புடன் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் இரவு நேரத்தில் பணிபுரிய அனுமதி.
8. 26 வாரகால ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு.
இப்படி பல முக்கிய சட்டக்கூறுகளைக் கொண்டுள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மிகப்பெரும் சீர்திருத்தம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களின் நலனை மேம்படுத்துவதோடு, இந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், தற்சார்பு பாரதக் கனவு நிறைவேறும் நாள் வெகுதூரமில்லை! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






