தி.மு.க.வுக்கு இழுக்க முயற்சியா..?: செங்கோட்டையனுடன் சேகர்பாபு சந்திப்பு

செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
சென்னை,
அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகே அக்கட்சியில் உள்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால், அப்போது ஆட்சி அதிகாரம் கையில் இருந்ததால் பிரச்சினை வெளியே தெரியவில்லை. முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். ஆனால், 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்த பிறகு, உள்கட்சி பூசல் வெளிச்சத்துக்கு வந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்டார்.
கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். ஆட்சியில் இருக்கும்போதே சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், அ.தி.மு.க. மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனும் அதிருப்தியில் இருந்து வந்தார். அவரது சொந்த மாவட்டமான ஈரோட்டில் கட்சிப் பதவியில் இருந்த கே.ஏ.செங்கோட்டையனின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு, எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களை நியமித்தார். இதனால், கடும் அதிருப்திக்கு உள்ளான கே.ஏ.செங்கோட்டையன், பத்திரிகையாளர்கள் சந்திப்பின் மூலம் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார். இதனால், கட்சிப் பதவி பறிக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடுவும் விதித்ததால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில்தான், முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி, பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றிணைந்து, அங்கு வந்த டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள். அவர்கள் அனைவரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி இதற்கு செவிமடுக்கவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வும் இதே கருத்தை வலியுறுத்தியும் எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. இந்த நிலையில், தொடர்ந்து மவுனம் காத்து வந்த கே.ஏ.செங்கோட்டையன் தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது, நாளை (27-ந் தேதி) தனது ஆதரவாளர்களுடன் நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருக்கிறார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ள கே.ஏ.செங்கோட்டையன், தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்தார். காலை 11.45 மணிக்கு சென்னை தலைமைச் செயலகம் வந்த அவர், சபாநாயகர் மு.அப்பாவுவை அவரது அறையில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
இந்த நிலையில், கே.ஏ.செங்கோட்டையனின் வருகையை கேள்விப்பட்ட அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அவரை சபாநாயகர் அப்பாவுவின் அறைக்கே சென்று சந்தித்து பேசினார். ஏற்கனவே, அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்த பி.கே.சேகர்பாபு, தற்போது கே.ஏ.செங்கோட்டையனையும் தி.மு.க.வுக்கு இழுக்க பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
பேச்சு வார்த்தைக்குப்பிறகு வெளியே வந்த கே.ஏ.செங்கோட்டையனை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். ஆனால் யாருடைய கேள்விக்கும் பதிலளிக்காமல் கையெடுத்து கும்பிட்டபடி காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
த.வெ.க.வா?, தி.மு.க.வா? என்பது கே.ஏ.செங்கோட்டையன் எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது. செங்கோட்டையன் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதும், அவரது அடுத்த கட்ட நகர்வு என்ன..? என்பதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.






