மனைவியை பாம்பு கடித்ததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை

கோப்புப்படம்
பாம்பு கடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவி இருப்பதை அறிந்த கணவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த பேரளம் அருகேயுள்ள கொல்லாபுரம் தோப்புத்தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (60 வயது). இவரது மனைவி லலிதா (54 வயது). இந்த தம்பதியர் கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று லலிதா வயல் வேலைக்கு சென்றபோது அவரை பாம்பு கடித்து விட்டது. இதனால் அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
மனைவியை பார்ப்பதற்காக நாகராஜன் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது லலிதாவின் உடல்நிலை மோசமாக இருப்பது அவருக்கு தெரிய வந்தது. இதனால் நாகராஜன் மனம் வெதும்பினார். பாம்பு கடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தனது மனைவி இருப்பதை அறிந்த அவரால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
மனைவி இறந்து விடுவார் என்று கருதிய அவர் வீட்டில் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நாகராஜனை சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜன் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நாகராஜனின் மனைவி நலமுடன் வீட்டுக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






