கடலூர்: பள்ளி வேன் விபத்தில் சிக்கியது எப்படி..? 3 மாணவர்கள் பலியான சோகம் - கேட் கீப்பர் கைது


கடலூர்: பள்ளி வேன் விபத்தில் சிக்கியது எப்படி..? 3 மாணவர்கள் பலியான சோகம் - கேட் கீப்பர் கைது
x
தினத்தந்தி 8 July 2025 10:41 AM IST (Updated: 8 July 2025 4:26 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் செம்மங்குப்பத்தில் வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் சிக்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர்

கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரெயில்வே கேட் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது.

இந்நிலையில், பள்ளி வேன் சென்றபோது, அந்த பகுதியின் வழியே சிதம்பரம் நோக்கி ரெயில் ஒன்று சென்றது. அது பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இதில் வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், ஒரு மாணவர், ஒரு மாணவி என 2 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது.

வேன் டிரைவர் மற்றும் பள்ளி குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தின்போது, ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது. ரெயில்வே கேட் கீப்பர், கேட்டை மூடவில்லை என கூறப்படுகிறது. அவர் பணியின்போது தூங்கியதில் ரெயில் வரும்போது கேட் மூடாமல் விடப்பட்டதே இந்த விபத்திற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, ரெயில்வே கேட் கீப்பர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து இந்த சம்பவம் பற்றி ரெயில்வே தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், ரெயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் டிரைவர் வலியுறுத்தினார். வேன் போகும் வரை கேட்டை மூட வேண்டாம் என அவர் கூறினார் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், இன்று காலை சுமார் 7.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. கேட் கீப்பர் கேட்டை மூட தொடங்கிய போது வேன் டிரைவர் வேனை வேகமாக இயக்கியதால் விபத்து ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட ரெயில்வே கேட் இன்டர்லாக் செய்யப்படாத கேட். கேட் கீப்பர் முறையாக மேனுவலாக கேட்டை மூட முயற்சித்துள்ளார். இதேபோன்று கேட்டை பாதி மூடி கொண்டிருக்கும்போது, வேன் டிரைவர் உள்ளே சென்றார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கேட் கீப்பர் பணியின்போது தூங்கியதே விபத்துக்கான காரணம் என பொதுமக்கள் கூறியநிலையில், ரெயில்வே மாறுபட்ட விளக்கம் அளித்தது.

இந்நிலையில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் செம்மங்குப்பம் பகுதியில் பணியாற்றிய கேட் கீப்பர் மீது ரெயில்வே அதிகாரிகள் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

தீவிர விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான முழு காரணம் பற்றி தெரிய வரும் என்று கூறப்படுகிறது. கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய ரெயில்கள் இந்த வழியே சென்று வரும் நிலையில், அந்த வழியே செல்லும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பள்ளி வேன் விபத்தில் சிக்கியது எப்படி?

இன்டர்லாக்கிங் அமைப்பு இல்லாததே விபத்துக்கு காரணம் என தகவல் தெரிவிக்கப்பட்டது. சிக்னலால் கட்டுப்படுத்தப்படும் ஒருங்கிணைந்த அமைப்பே இன்டர்லாக்கிங். கேட் திறந்திருந்தால் 1 கி.மீ முன்னதாக இருக்கும் சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும். சிக்னலைப் பார்த்து ஓட்டுநர் ரெயிலை நிறுத்திவிடுவார் என்பதால் விபத்துகள் தவிர்க்கப்படும். செம்மங்குப்பம் கேட்டில் இன்டர்லாக்கிங் இல்லாததால் கேட் திறந்திருந்ததை ஓட்டுநரால் அறிய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

'Non Interlocking' ரெயில்வே கேட் என்றால், அதனை மூடுவதற்கு தொலைபேசி மூலமே தகவல் தரப்படும். தொலைபேசி மூலம் தகவல் அளித்து கேட் மூடியதை உறுதிப்படுத்திய பின்னரே ரெயில் செல்வதற்கு சிக்னல் அளிக்கப்படும்.

செம்மங்குப்பத்தில் ரெயில்வே கேட்டை மூடிவிட்டதாக உறுதி அளித்தபின், பள்ளி வேனை மட்டும் கேட் கீப்பர் அனுமதித்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மூன்று மாணவர்கள் உயிரிழப்பு

பள்ளி வேனில் டிரைவர் மற்றும் 4 மாணவர்கள் பயணித்துள்ளனர். அந்த கோர விபத்தில் சிக்கி மாணவி சாருமதி(15), மாணவர் நிமலேஷ் (10) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

மாணவர்கள் செழியன், விஷ்வேஸ் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செழியன் என்ற மாணவர், சிகிச்சை பலனில்லாமல் உயிரிந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

பள்ளி வேனை இயக்கிய டிரைவர் சங்கரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரெயில் மோதியபோது ரெயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை என்பவர் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து, படுகாயங்களுடன் அவர் சிகிக்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் பலியான சோகம்

செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்தில் சிக்கிய தொண்டமாநத்தத்தை சேர்ந்த சாருமதி (11-ம் வகுப்பு), அவரது தம்பி செழியன் (10-ம் வகுப்பு) ஆகியோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரசு தரப்பில் இழப்பீடு

பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம்; லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000; உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா ரூ. 5 லட்சம்

ரெயில்வே தரப்பில் இழப்பீடு

படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2.50 லட்சம். லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000. உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம்

1 More update

Next Story