பால, யுவ புரஸ்கார் விருது பெறும் எழுத்தாளர்களுக்கு கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து

கோப்புப்படம்
2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், வங்காளம் உள்ளிட்ட 24 மொழிகளில் வெளியாகும் கதை, கவிதை, கட்டுரை, நாவல் போன்ற சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி முதன்மை விருது, பால சாகித்ய புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருது ஆகிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் இலக்கிய படைப்புகளுக்காக இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதுகள் ஆகும்.
இதன்படி இந்த ஆண்டுக்கான பால புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ் மொழிக்கான பால புரஸ்கார் விருது, விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய 'ஒற்றைச்சிறகு ஓவியா' என்ற நாவலுக்கும், யுவ புரஸ்கார் விருது, லட்சுமிஹர் எழுதிய 'கூத்தொன்று கூடிற்று' என்கிற சிறுகதை நூலுக்கும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் லட்சுமிஹர்க்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சிறந்த தமிழ் நாவல் "ஒற்றைச்சிறகு ஓவியா" படைப்புக்காக 2025-ம் ஆண்டுக்கான பால சாகித்ய விருதுக்குத் தேர்வாகியுள்ள விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் தனது அற்புதமான தமிழ் சிறுகதை தொகுப்பான "கூத்தொன்று கூடிற்று மற்றும் பிற கதைகள்" என்ற படைப்புக்காக 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவ விருதுக்கு தேர்வாகியுள்ள லட்சுமிஹர்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இந்த மதிப்புமிக்க விருதுகள் தமிழ் இலக்கியத்துக்கு அவர்கள் வழங்கி வரும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கு சான்றாக விளங்கி, புதிய தலைமுறை எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களை ஊக்குவிக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.