வடமாநில இளைஞர் மீதான தாக்குதல் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் - அரசு கோரிக்கை


வடமாநில இளைஞர் மீதான தாக்குதல் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் - அரசு கோரிக்கை
x

சமீப காலங்களில் பிற மாநில மக்களுக்கு எதிரான வன்முறை குறித்து எந்த புகாரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

27.12.2025 அன்று, திருத்தணி ரெயில்வே குவார்ட்டர்ஸ் அருகே ஒரு நபர், ஒரு சில நபர்களால் தாக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து ஒடிசாவைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில் திருத்தணி காவல் நிலையத்தில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவருக்கு முறையான மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

விசாரணையில் இன்ஸ்டாகிராம் ரீல்களைப் பதிவேற்றும் நோக்கத்துடன் சட்டத்துடன் முரண்படும் வகையில் நான்கு சிறுவர்கள் (CCLs) இந்த குற்றத்தைச் செய்துள்ளனர். குழுக்கள் அமைக்கப்பட்டு, இறுதியாக, நான்கு சிறுவர்களும் 28.12.2025 அன்று கைது செய்யப்பட்டு சிறார் நீதி வாரியத்தில் (JJB) ஆஜர்படுத்தப்பட்டனர்.

நான்கு சிறுவர்களில் மூன்று பேர் செங்கல்பட்டில் உள்ள பாதுகாப்பு இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர், மேலும் ஒரு சிறுவன், சிறார் நீதி வாரியத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட சிறுவர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் தகுந்த மற்றும் உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கத் தொடங்கி உள்ளனர், மேலும் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த குறிப்பிட்ட சம்பவத்தைத் தவிர, சமீப காலங்களில் பிற மாநில மக்களுக்கு எதிரான வன்முறை குறித்து எந்த புகாரும் இல்லை. பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு நல்லுறவு மற்றும் பாதுகாப்பான சூழல் நிலவுகிறது.

பிற மாநிலங்களைச் சேர்ந்த தனிநபர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அவர்கள் வசிக்கும் பகுதிகளிலும், பணியிடங்களிலும் போதுமான போலீஸ் ரோந்துகள் வழங்கப்பட்டுள்ளன. பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக தொழில்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் வழக்கமான கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக கடுமையான கண்காணிப்பு பராமரிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் வீடியோவை சமூக ஊடக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது, ஏனெனில் இது பொது ஒழுங்கைப் பாதிக்கக்கூடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story