தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு எச்சரிக்கை


தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 Nov 2025 10:43 PM IST (Updated: 24 Nov 2025 10:48 PM IST)
t-max-icont-min-icon

கரையோர மக்கள், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி


தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இலங்கை கடற்பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக பள்ளங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சேரன்மாதேவி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி, அம்பை, நாங்குநேரி மற்றும் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பாபநாசம் அணை, மணிமுத்தாறு அணைகள் நிரம்பும் தருவாயில் இருப்பதால் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் மலைப்பகுதியில் உள்ள காட்டாறுகள், ஊர்ப்பகுதிகளில் பெய்து வரும் மழைநீரும் தாமிரபரணி ஆற்றில் கலந்து வினாடிக்கு 19 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. இதனால் ஆற்றில் நேற்று 2-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை சூழ்ந்தவாறு செல்கிறது. மேலும் அங்கு செல்லும் நடைபாலத்தையும் மூழ்கடித்தது.

இந்த நிலையில், காரையாறு, சேர்வலாறு அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்படுவதால், கரையோர மக்கள், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு மையம் மூலமாக பொதுமக்களின் செல்போனுக்கு மெசேஜ் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story