காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டாம் - கூட்டணி கட்சிகளுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. எச்சரிக்கை


காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டாம் - கூட்டணி கட்சிகளுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. எச்சரிக்கை
x

கோப்புப்படம் 

கூட்டணி கட்சியின் உட்கட்சி செயல்பாடுகளை பொதுவெளியில் விமர்சிப்பது ஆபத்தானது என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியுள்ளார்.

சென்னை,

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, விஜய்யை நேரில் சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தை விட அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக பிரவீன் சக்ரவர்த்தி கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் தலையிட வேண்டாம் என்று விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருமாவளவன், வைகோ, சண்முகம், வீரபாண்டியன் ஆகிய தலைவர்களை குறிப்பிட்டு மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க இந்திய எதிர்கட்சி தலைவரிடம் கோரிய செய்தியை தனியார் நாளிதழில் படித்தேன். இது ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது:

காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துகளை இக்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா? தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை ரவிக்குமார் எம்.பி., துரை வைகோ, சண்முகம், வீரபாண்டியன் ஆகியோரிடம் “உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள்” என்று சொன்னால், அவர்கள் அதை சகிப்பார்களா?

கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன - பொது அழுத்த அரசியலால் அல்ல. ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடக அறிக்கைகள் மூலம் அல்ல; கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும்.

ஒரு கூட்டணி கட்சியின் உள்கட்சி செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது; இது பாஜக - ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையையே பலவீனப்படுத்தும். இது கட்சி செயல் வீரர்கள் தன்மான உணர்வை தூண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும், கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல், அண்ணன் வைகோ, திருமாவளவன் அண்ணனும், கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் “லட்சுமண ரேகை”யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஒற்றுமை என்பதன் அர்த்தம் மௌனம் அல்ல - ஆனால் அது கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் குறிக்கிறது. கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story